பிரதிநிதித்துவப்படம் 
தமிழகம்

தகுதியற்ற அரசு பேருந்துகளுக்கு தகுதிச்சான்று புகார்: நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவு

சி.கண்ணன்

சென்னை: அரசு பேருந்துகளுக்கு தகுதிச்சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கு.பாலதண்டபாணி அண்மையில் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், "பெரும்பாலான அரசு பேருந்துகள் சாலையில் இயக்குவதற்கு தகுதியற்றவையாக உள்ளன. இதை முறையாக ஆய்வு செய்யாமல் போக்குவரத்துத் துறை பேருந்துகளுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கி விடுகிறது.

இவ்வாறான நடவடிக்கை, பொதுமக்களின் உயிரோடு தொடர்புடையது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை காண்பிக்கவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இதை பதிவு செய்த மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அஃதர், "ஓட்டுநர் கூறிய தகவலின் தீவிரத் தன்மையை கவனத்தில் கொள்வதோடு சாலையில் இயக்கப்படுவதற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படா வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT