கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்த கைதிகளுடன் பலத்த பாதுகாப்புடன் பேரூரணி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
தமிழகம்

கனமழை எதிரொலி: ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து கைதிகள் இடமாற்றம்

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி: கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 25 கைதிகள் பேரூரணி சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டை போல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் இங்குள்ள அரசு மருத்துவமனை, கிளைச்சிறையை சூழ்ந்தது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிரமத்தை சந்தித்தனர்.இதனால் இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கடந்த 2 நாட்களாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சனிக்கிழமை ஒரே நாளில் 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மகப்பேறு பிரிவில் மட்டும் ஒருவர் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கிளை சிறைச்சாலையில் இருந்து மழை வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை இரவு 25 கைதிகள் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறைச்சாலைக்கு ஆயுதப்படை ஆய்வாளர் துணை முருகன் தலைமையில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT