தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின.
கடந்த 3 தினங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை இடைவிடாது மழை
பெய்தது. நேற்று ஒரே நாளில் 37 வீடுகள் சேதமடைந்ததுடன், 7 கால்நடைகள் உயிரிழந்தன.
திருவோணம், நடுக்காவிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா, நிலக்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், நிலக்கடலை, வாழை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை முதல் 25,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால், ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வேங்கையன்(75) என்பவர் உயிரிழந்தார். திருமானூர், செந்துறை பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது.