கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற் றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து நேற்று காலை விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் தென் பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் என்பதால் ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கோண்டூர் ஊராட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன் ஆகியோர் தலைமையில் ஊராட்சி செயலாளர் வேலவன் மற்றும் ஊழியர்கள் கரையோர மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கையாக இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் எச்சரிக்கை விடுத்தனர்.