தமிழகம்

நீலகிரியில் பரவலாக மழை: உதகை - குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மலை ரயில் பாதையில் மரம் விழுந்ததால், உதகை - குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வெயிலான காலநிலை நிலவியது. இந்நிலையில், இன்று (டிச.12) மீண்டும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காலை முதலே கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை தீவிரமடைந்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக உதகை கோத்தகிரி சாலையில் மைனலை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. உதகையிலிருந்து தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதே போல மலை ரயில் பாதையில் உதகை அருகே கேத்தி ரயில் நிலையம் பகுதியில் மரம் விழுந்தது.

இதனால், உதகை - குன்னூரிடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டம் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. உதகை தாவரவியல் பூங்காவில் கணிசமான சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் குடைகள் பிடித்தப்படியே பூங்காவை கண்டு ரசித்தனர்.

மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கோடநாட்டில் 22 மி.மீ., மழை பதிவானது. உதகையில் 16.5, கிளன்மார்கன் 16, கோத்தகிரி 8, கிண்ணக்கொரை 7, குன்னூர் 6.7, எமரால்டு 6, அலாஞ்சி 5, அப்பர் பவானி 3 மி.மீ., மழை பதிவானது.

SCROLL FOR NEXT