மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களால் எத்தனை விபத்துகள் நேரிட்டுள்ளன, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மனைவி நாகஜோதி, மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக உள்ளார். அதிமுக 53-வது ஆண்டு விழாவையொட்டி விளாங்குடி பகுதியில் உள்ள பழைய அதிமுக கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் வைக்க அனுமதி கோரி, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், அனுமதி வழங்கவில்லை.
மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து அனுமதி கேட்டபோது, பட்டா இடங்களில் மட்டுமே கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என்று தெரிவித்தார். அதிமுக கொடி கம்பம் வைக்க அனுமதி கேட்கும் இடத்தில் திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. இவை எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளன.
அதிமுக கொடிக் கம்பத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படாது. எனவே, அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, “இந்த வழக்கில் டிஜிபி எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற ஏன் உத்தரவிடக்கூடாது? கொடிக் கம்பங்களால் எத்தனை விபத்துகள் நேரிட்டுள்ளன? இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜன. 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.