இடம்: கோவை | படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

“இது இந்து விரோத அரசு...” - கோவை ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது

இல.ராஜகோபால்

கோவை: “வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்து விரோத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது” என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

வங்கதேச உரிமை மீட்புக் குழு சார்பில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் இன்று (டிச.4) ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். காவல் துறை அனுமதி மறுத்த நிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியது: ''வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்தவுடன் இந்துக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் காளி கோயில், இஸ்கான் கோயில் போன்றவை கொளுத்தப்பட்டுள்ளன. இந்துகளின் வர்த்தக ஸ்தாபனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்து மக்களை ஒருங்கிணைத்த இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

| படம்: ஜெ.மனோகரன்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது , இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழக அரசு இந்து விரோத அரசாக செயல்படுகிறது. வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு சர்வதேச அளவில் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்'' இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT