தமிழகம்

வெள்ளம் பாதித்த மாவட்ட மாணவர்களுக்கு சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு வழங்குக: அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 1-ஆம் நாள் நடத்தப்பட்ட சட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கணிசமான மாணவர்களால் எழுத முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் தான் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்கள் செய்யாத தவறுக்காக சட்டப்படிப்பில் சேருவதற்கான அவர்களின் வாய்ப்பு பறிக்கப்படக்கூடாது.

எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக மாணவர்களின் சார்பில் அந்தக் கூட்டமைப்பிடம் தமிழக அரசின் சட்ட அமைச்சகம் முறையீடு செய்ய வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT