மேட்டூர்: இளநிலை, முதுநிலை மற்றும் உயர் கல்வி படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் காவல் துறையில் சேர்ந்து வருகிறார்கள் என்று சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநரும் (பயிற்சி), டிஜிபியுமான சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ம் நிலை காவலர்கள் தேர்வில் 2,665 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 8 பயிற்சி பள்ளிகளில் நாளை (4-ம் தேதி) முதல் பயிற்சி வழங்கப்பட்டவுள்ளது. இதனையொட்டி, சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 422 ஆண் காவலர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறை இயக்குநரும் (பயிற்சி), டிஜிபியுமான சந்தீப் ராய் ரத்தோர் இன்று (3-ம் தேதி) பயிற்சி காவலர்களுக்கான அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பயிற்சி பள்ளிக்கு வந்த 2-ம் நிலை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். பின்னர், காவல் பயிற்சி பள்ளியில் உள்ள வகுப்பறைகள், தங்கும் விடுதி, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சந்திப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,665 பேருக்கு 7 மாதம் அடிப்படை பயிற்சியும் மற்றும் ஒரு மாத காலம் நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 8 காவல் பயிற்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பள்ளிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்து தரப்படும். காவல் பயிற்சி பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், துணை முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது.
பயிற்சி பெறும் காவலர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், சட்டம், கைரேகை உள்ளிட்ட பிரிவுகள் குறித்து வல்லுநர்கள் எடுக்கும் பயிற்சி வகுப்புகளை பதிவு செய்து டிஜிட்டல் முறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பயிற்சி காலத்தில் காவலர்கள் எப்போதும் வேண்டுமானலும் படித்து கொள்ளலாம். மேலும், காவலர்கள் பணி காலத்தில் கூட மீண்டும் வீடியோவை பார்த்து கொள்ளலாம். இளநிலை, முதுநிலை மற்றும் உயர் கல்வி படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் காவல்துறையில் சேர்ந்து வருகிறார்கள்.
எனவே, இளைஞர்களின் திறனை மேம்படுத்த திறன் வகுப்புகளை கொண்டு வரப்படும். பணி காலத்தில் பல்வேறு பிரிவுகளில் நமது காவலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். 8 காவல் பயிற்சி பள்ளிகளில் உள்ள உட்புற மற்றும் வெளிப்புற பயிற்றுநர்களுக்கு முதல் முறையாக பயிற்றுநர்களுக்கான பயிற்சியை (TOT) மதுரை காவல் பயிற்சிப் பள்ளியில் நடத்தப்பட்டது. பயிற்சி காவலர்களுக்கு பயிற்சியை திறம்பட நடத்துவதற்கும் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும்" என்று சந்திப் ராய் ரத்தோர் கூறினார்.