தமிழகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 வெள்ள நிவாரணம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 விரைவில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் அவர் நேற்று கூறியதாவது: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. 50 செ.மீ. மழை பதிவானது. வருவாய் துறை சார்பில் 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தரப்பட்டன. மீட்பு பணியில் 12 பேருந்துகள், 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டனர். அத்துடன், பேரிடர் மீட்பு படையினர் 55 பேர் இரு குழுக்களாக வந்தனர். அத்துடன் ராணுவத்தினர் 70 பேரும் மீட்பு பணியில் உள்ளனர்.

ஒருவர் காணாமல் போய் உள்ளார். 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தரப்படும். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய இடங்களில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு ஹெக்டேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

4 மாடுகள் இறந்துள்ளதால் தலா ரூ.40 ஆயிரமும், 16 கிடாரி கன்றுகள் இறந்துள்ளதால் தலா ரூ.20 ஆயிரமும் தரப்படும். சேதமடைந்த 50 படகுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் தரப்படும். சேதமடைந்த 15 கூரை வீடுகள் கட்ட தலா ரூ.20 ஆயிரமும், பகுதி அளவில் சேதமடைந்த 10 வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் தரப்படும். இந்த நிவாரணத்துக்கு ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இது தென்பெண்ணை ஆறு மூலம் வந்து பாகூரில் உட்புகுந்துள்ளது. வீடூர் அணை திறக்கப்பட்டு வில்லியனூர் ஆரியப்பாளையம் உள்ளிட்ட கரை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடூர். சாத்தனூர் அணை திறப்புக்கு முன்பாக தகவல் தந்தனர். ஆனால், கூடுதல் நீர் வரத்தால் உட்புகுந்துள்ளது.

மின் விநியோகம் நகரப் பகுதிகளில் 90 சதவீதம் தரப்பட்டுள்ளது. எஞ்சிய 10 சதவீதமும் மாலைக்குள் தரப்பட்டுவிடும். வாகனங்கள் பாதிப்பு தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும். சாலைகள். பாலங்கள் என உட்கட்டமைப்பு சேதத்துக்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி மத்திய அரசிடம் கேட்டு தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்தியக் குழு வந்து பார்வையிடவும் கோரியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT