செம்பரம்பாக்கம் ஏரி (கோப்புப் படம்) 
தமிழகம்

தொடர் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரிப்பு

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: தொடர் கனமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் மழைநீர் வரத்து விநாடிக்கு 4,215 கன அடியாக உள்ளது.

‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீரின் வரத்து அதிகரித்துள்ளது.

அம்மழைநீர், சனிக்கிழமை மதியம் 2 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,215 கன அடி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 3,461 கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 340 கன அடி, கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 140 கன அடி என, வந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 310 கன அடி கிருஷ்ணா நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 85 கன அடி நீர் பூண்டி ஏரியிலிருந்தும் வந்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இன்று மதியம் 2 மணி நிலவரப்படி, 24 அடி உயரமும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19.15 அடியாகவும், நீர் இருப்பு 2,398 மில்லியன் கன அடியாகவும், 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட புழல் ஏரியின் நீர் மட்டம் 17.28 அடியாகவும், நீர் இருப்பு 2,461 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 22.95 அடியாகவும், நீர் இருப்பு 572 மில்லியன் கன அடியாகவும், 36.61 அடி உயரமும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் மட்டம் 30.50 அடியாகவும், நீர் இருப்பு 309 மில்லியன் கன அடியாகவும், 18.86 அடி உயரமும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 2.78 அடியாகவும், நீர் இருப்பு 126 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது என, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT