சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடப்பதால், சென்னை உள்ளிட்ட7 மாவட்டங்களில் கட்டுமான நிறுவனங்கள் கிரேன்களையும், விளம்பர போர்டுகளையும் கீழே இறக்கி வைக்கும்படி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: "ஃபெஞ்சல் புயல் நாளை நவ.30ம் தேதி கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, “அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலை நிறுத்துமாறும் அறிவுறுத்தப் படுகின்றனர். மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப் படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது" என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறப்பட்டுள்ளது.