சென்னை: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக்கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்ந்து, நாளை (நவ.27) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை தொடரக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நவ.27ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நவ.28-ம் தேதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. நவ.29-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
இன்று (நவ.26) முதல் வரும் 30-ம் தேதி வரை, மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நவ.27 மற்றும் நவ.28ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில், தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரையில், கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 328 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 337 மி.மீ. இயல்பை ஒட்டி மழை பெய்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக்கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
கடலின் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் அதுவொரு சாதகமான நிலை. அதேபோல், காற்று குவிதல் மற்றும் விரிவடைதலும் முக்கியம். இந்த காற்று குவிதலும், விரிவடைதலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, புயல் உருவாவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காற்று திசை மாறும் பகுதி, அதாவது காற்றின் வேகமும், திசையும் சாதகமான சூழலில் இருப்பதால், புயலாக உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரம் புயல் கரையை கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார். | வாசிக்க > உருவாகிறது புயல்: தமிழகத்தில் புதன்கிழமை 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை