விருதுநகர்: மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மழை வெள்ளம் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் இந்த அரசு சமாளிக்கும். ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள படகுகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக, ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் குடியிருப்பு பகுதியில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றும் பணியை அரசு தீவிரமாகச் செய்துள்ளது என்றார்.