ஹனுமந்த ராவ் 
தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்பட தொடங்கும்: எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் உறுதி

செய்திப்பிரிவு

மதுரை எய்மஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்படத் தொடங்கும் என எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி பள்ளிக் குழுமம் சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ் முன்னிலை வகித்து பேசியது: நாற்பது சதவீத புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது. ஆபத்தான 5 வகையான புற்று நோயை தடுக்க ஹெச்பிவி தடுப்பூசியை மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்குகின்றன. 19 வயது முதல் 45 வயதினர் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

பின்னர் அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் குறித்து கேட்டபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணி வேகமாக நடந்து வருகிறது. மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி, வெளி நோயாளிகள் மற்றும் குறிப்பிட்ட உள் நோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டடப் பணிகள் முடிந்து 2025 டிசம்பரில் எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்.

அப்போது ராமநாதபுரத்தில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முழுவதுமாக மதுரைக்கு மாற்றப்படும். மீதமுள்ள கட்டடப் பணி அதற்கடுத்த 15 மாதங்களில் முடிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் முழுவதுமாக செயல்படும். இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT