சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தராகண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் தன்சிங் ராவத் பார்வையிட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவ குழுக்கள் வந்து பார்வையிட்டு, அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன்சிங் ராவத் நேற்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், நோயாளிகளுக்கு சமைத்து வழங்கப்படும் உணவு கூடங்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர், நோயாளிகளின் உறவினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சென்னை மருத்துவ கல்லூரிக்கு சென்று, வகுப்பறைகளை பார்வையிட்டார்.
பின்னர், மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் குஜராத்தி மொழியில் தன் கைப்பட எழுதிய வாழ்த்து கடிதம் ஒன்றை வழங்கினார். அதில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான சென்னை மருத்துவ கல்லூரியை பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என கூறப்பட்டிருந்தது.