தமிழகம்

கனிமொழி இல்லாமல் ஆய்வுக் கூட்டமா? - தூத்துக்குடியில் புயலைக் கிளப்பிய துணை முதல்வர் பயணம்

ரெ.ஜாய்சன்

அத்தை கனிமொழியுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் இவர்கள் இருவரையும் முன்னிறுத்தி அவ்வப்போது எழும் அரசியல் சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில், உதயநிதியின் தூத்துக்குடி மாவட்ட ஆய்வுக் கூட்டம் புதிய புயலைக் கிளப்பி இருக்கிறது.

தூத்​துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல​கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த 14-ம் தேதி அரசு திட்டப்​பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்​டத்​தில், மாவட்ட அமைச்​சர்களான பெ.கீ​தாஜீவன், அனிதா ஆர்.ரா​தாகிருஷ்ணன் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்​ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநி​திகள் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி-யான கனிமொழி பங்கேற்​க​வில்லை. இது அதிகாரிகள் மற்றும் கட்சி​யினர் மத்தியில் சில ஊகங்களை எழுப்​பியது. ஆய்வுக் கூட்டம் முடிந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம், கூட்டத்தில் கனிமொழி எம்.பி பங்கேற்​காதது குறித்து செய்தி​யாளர்கள் கேட்டதற்கு, “அவரிடம் சொல்லி​விட்டு தான் நான் வந்தேன்.

அவர் ஒரு அவசர வேலையாக வெளிநாடு சென்றுள்​ளார். அடுத்த 10 அல்லது 15 நாளில் திரும்பி வந்து​விடுவேன் என கூறியுள்​ளார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஒன்றாக நிகழ்ச்​சியில் கலந்து கொள்வோம்” என்றார் உதயநிதி. ஆனால், அதற்கு பின்பு நடந்த நிகழ்வு தான் தூத்துக்குடி திமுகவில் புயலை கிளப்​பி​யுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவல​கத்தில் ஆய்வு கூட்டம் முடிந்​ததும், மாலை 5 மணியளவில் தூத்துக்குடி குறிஞ்​சிநகர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பவளவிழா ஏற்பாடாகி இருந்தது.

உதயநிதி ஸ்டாலின் இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும், அதனை முடித்துக் கொண்டு கார் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்​புவார் என்றும் முதலில் அறிவிக்​கப்​பட்​டிருந்தது. ஆனால், ஆய்வுக் கூட்டம் முடிந்​ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்​காமல் உதயநிதி ஸ்டாலின் அவசர, அவசரமாக தூத்துக்குடியி​லிருந்து விமானம் மூலம் சென்னை திரும்​பி​விட்​டார்.

வடக்கு மாவட்ட திமுக சார்பில் 405 தையல் இயந்திரம், 150 கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்கள் என ரூ.50 லட்சம் மதிப்​பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க மிக பிரம்​மாண்டமான முறையில் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடுகளை செய்திருந்​தார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் வராததால் தையல் இயந்திரங்களை மட்டும் பயனாளி​களுக்கு அமைச்சர் கீதாஜீவனே வழங்கி​னார்.

முதல்வர் மு.க.ஸ்​டாலின் அறிவுறுத்​தலின் பேரிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்​காமல் உதயநிதி ஸ்டாலின் அவசரமாக சென்னை திரும்​பியதாக கூறப்​படு​கிறது. கனிமொழி இல்லாத நேரத்தில் கட்சி சார்பில் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சி வேண்டாம். அவர் வந்த பிறகு இன்னொரு நாளில் நிகழ்ச்சியை மீண்டும் நடத்தலாம் என முதல்வர் உதயநிதிக்கு அறிவுறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல இருவரும் பங்கேற்கும் வகையில் ஒரு விழா மீண்டும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்​துள்ளது. அதே சமயம், கனிமொழி இல்லாமல் ஆய்வுக் கூட்டம் நடத்தியது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை உதயநிதி ஸ்டாலின் ரத்து செய்தது போன்ற​வற்றில் உள் விவகாரம் ஏதோ இருப்பதாக திமுக​வினரே கிசுகிசுக்​கின்​றனர். கனிமொழி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்தால்தான் இந்தப் பிரச்​சினைக்கு ஒரு முற்றுப்​புள்ளி விழும்!

SCROLL FOR NEXT