தமிழகம்

“இந்தித் திணிப்புக்கான கருவியாக சுருக்கப்பட்டுள்ளது எல்ஐசி இணையதளம்” - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: “எல்ஐசி இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட இந்தியில்தான் உள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல. உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திப் பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “எல்ஐசி இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட இந்தியில்தான் உள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல.

இந்தியர்கள் அனைவரின் ஆதரவோடும் வளர்ந்ததுதான் எல்ஐசி. அத்தகைய நிறுவனம் தனது வளர்ச்சிக்குப் பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி வஞ்சிக்கத் துணியலாமா?
உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திப் பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எல்ஐசி இணையதளப் பக்கம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT