தமிழகம்

“எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்..!” - மகனுக்காக ஒதுங்குகிறாரா பொன்முடி?

எஸ். நீலவண்ணன்

உயர் கல்வித் துறைக்கு அமைச்சராக இருந்த பொன்முடி இப்போது வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். ஆளுநருடன் இணக்கத்தைக் கடைபிடிக்கவே இந்த இலாக மாற்றம் என்று சொல்லப்படும் நிலையில், அக்டோபர் 17-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய பொன்முடி, “சட்டப் பேரவைத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

ஏன், எனக்கேகூட சீட் இல்லாமல் போகலாம்” என்றார். உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்துவதற்காக அவர் இப்படிப் பேசியதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில அரசியல் நகர்வுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இது​குறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக​வினர், “எதிர்​காலத்தில் கட்சி​யையும் ஆட்சி​யையும் வழிநடத்​தவிருக்கும் உதயநி​தியின் வேகத்​துக்கு சுறுசுறுப்பாக ஓடிவரக்​கூடிய​வர்​களுக்கு கட்சி​யிலும் தேர்தலிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நினைக்​கிறது தலைமை.

அதற்காக இப்போதைய சீனியர் அமைச்​சர்கள் சிலருக்கு 2026 தேர்தலில் ஓய்வு கொடுத்து​விட்டு இளையவர்​களுக்கு வாய்ப்​பளிக்கும் முடிவில் தலைமை இருக்​கிறது. கட்சியின் துணைப் பொதுச்​செய​லாளர் என்ற முறையில் பொன்முடிக்கு தலைமையின் இந்த எண்ணவோட்டம் ஓரளவுக்கு தெரிந்​திருக்​கும். அதன்வெளிப்பாடு தான், ‘எனக்கே சீட் இல்லாமல் போகலாம்’ என்ற அவரது பேச்சு” என்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் விழுப்பு​ரத்தில் பிரச்​சாரம் செய்த உதயநிதி, “நமது அமைச்சர் பொன்முடி 35 ஆண்டுகள் கலைஞரோடு பயணித்​தவர்; கலைஞரின் தம்பி. நம் தலைவரின் தளபதி, என் அரசியல் வழிகாட்டி. அவர் இல்லை​யென்றால் நான் கிடையாது. அவருக்கு கவுதமசி​காமணி எப்படி ஒரு பிள்ளையோ, அப்படி நானும் ஒரு பிள்ளை.

நம் தலைவர் அமைச்சர் பொன்முடியை​யும், கவுதமசி​காமணி​யையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்​கொடுக்​க​மாட்​டார்” என்று பேசினார். மார்ச்சில் அவர் இப்படிப் பேசிச் சென்றார். ஜூனில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்​பாளராக கவுதமசி​காமணி நியமிக்​கப்​பட்​டார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற தெற்கு மாவட்ட செயல்​வீரர்கள் கூட்டத்தில் பேசிய பொன்முடி, “25 ஆண்டு​களுக்கு முன்பே தளபதி நற்பணி மன்றம் துவக்கி அப்போதே உதயநிதியை அழைத்து வந்தது இந்த விழுப்புரம் நகரம்​தான். அந்த உழைப்​பிற்குத் தான் திமுக தலைமை இப்போது மாவட்டப் பொறுப்​பாளராக கவுதமை அடையாளம் காட்டி​யுள்ளது” என்றார்.

இந்த நிகழ்வு​களுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்​சிகளில் மட்டுமல்லாது அரசு நிகழ்ச்​சிகளிலும் பொன்முடிக்கு நிகராக முக்கி​யத்துவப் படுத்​தப்​படு​கிறார் கவுதமசி​காமணி. கட்சி சம்பந்​தப்பட்ட முக்கிய பணிகளை முழுமையாக கவுதமசி​காமணி​யிடம் ஒப்படைத்து​விட்டார் பொன்முடி. தன்னைச் சந்திக்க வரும் நிர்வாகி​களைக்கூட, “கவுதமைப் பாருங்கள்” என திருப்​பி​விடு​கிறார் பொன்முடி.

இதையெல்லாம் சுட்டிக்​காட்டும் விழுப்புரம் திமுக​வினர், “தலைமையின் குறிப்​பறிந்து, பொன்முடி 2026 தேர்தலில் போட்டி​யிடாமல் ஒதுங்க நினைக்​கலாம். அப்படி முடிவெடுத்தால் தனது தொகுதியில் தனது மகன் கவுதமசி​காமணியை நிறுத்தி அவரை அடுத்​தகட்​டத்​துக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருக்​கிறார். அதற்கான முன்னேற்​பாடுகள் தான் இதெல்​லாம்” என்கிறார்கள்.

இந்த நிலையில், “எனக்கே சீட் இல்லாமல் போகலாம்” என்ற பொன்முடியின் பேச்சு குறித்து கவுதமசி​காமணி​யிடம் கேட்டதற்கு, “கட்சி​யினரை உற்சாகப்​படுத்​தத்தான் அப்படி பேசினார். மற்றபடி அதற்கு வேறெந்த அர்த்​தமும் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT