சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் தி.நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் வரையிலான சுரங்கப்பணியில், முதல் சுரங்கப்பாதையை மார்ச் மாதத்துக்குள் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம் பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப் படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், இதே வழித்தடத்தில், தியாகராய நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பெலிகன்’, பூமியில் இருந்து 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கடந்த ஜனவரியில் தொடங்கியது.
அடுத்த சில மாதங்களில் ‘பிகாக்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியைத் தொடங்கியது. இரண்டு இயந்திரங்களும் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைத்து, கோடம்பாக்கம் புறநகர் ரயில் பாதை மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் வந்து, விரைவில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் நிலையத்தை அடையும்.
பணிகள் கண்காணிப்பு - இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பனகல் பூங்கா - கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணியைப் பொறுத்தவரை, மொத்தம் 1,254 மீட்டர் அமைக்க வேண்டும். ‘பெலிகன்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக 880 மீட்டரும், ‘பிகாக்’ இயந்திரம் மூலமாக சுமார் 800 மீட்டரும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மேம்பாலங்கள், மருத்துவமனைகள் அல்லது பழைய பாரம்பரிய கட்டிடங்கள் போன்ற முக்கியமான கட்டமைப்புகளைக் கடக்கும்போது, செயல்முறையை தீவிரமாக கண்காணிக்கிறோம். ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் முன்பு, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த வழித்தடத்தில், முதல் சுரங்கப் பாதையை வரும் ஆண்டில் மார்ச்சுக்குள் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.