தமிழகம்

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 3,827 பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக, இன்று 3,827 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 1,540 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கல்வி, பணி, தொழில் நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர், சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 10,784 பேருந்துகள் மூலமாக 5.76 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக, நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை (நவ.4) திங்கள்கிழமை என்பதால் பெரும்பாலானோர் இன்று பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இன்று அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,735 சிறப்பு பேருந்துகள் என 3,827 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 1,540 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் அதற்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT