சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் உட்பட பல்வேறு என்கவுன்ட்டர் சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர்கள் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், பிரபல ரவுடியான காக்காதோப்பு பாலாஜி மற்றும் சீஸிங் ராஜா, புதுக்கோட்டையில் துரைசாமி மீதான என்கவுன்ட்டர் சம்பவங்களில் தொடர்புடைய காவல் ஆய்வாளர்கள், விசாரணை அதிகாரிகள் உள்ளிட்டோர், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆணையத் தலைவர் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.