சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.1-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ, தேனி மாவட்டம் பெரியாறு, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றுமுதல் நவ.3-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நவ.1-ம் தேதி ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில .பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.