சென்னை: அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் உள்ள ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை நிலுவை தொகையாக பணமில்லா பரிவர்த்தனை முறையில் வழங்கப்பட வேண்டும்.
அரசு ஓய்வூதியர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஒய்வூதியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
தற்போதைய மற்றும் எதிர்கால குடும்ப ஓய்வூதியர்கள், பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களை பொருத்தவரை, அகவிலைப்படி விகிதாச்சாரத்துக்கு இணங்க பிரிக்கப்படலாம்.
மேலும், கடந்த 1956-ம் ஆண்டு தமிழகத்துக்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் முந்தைய திருவாங்கூர் - கொச்சி மாநில ஓய்வூதியர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதியின்கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.