கல்வராயன் மலைப்பகுதியின் மேல் பாச்சேரி கிராமம் (கோப்புப் படம்) 
தமிழகம்

கல்வராயன் மலைப் பகுதியில் சாலை வசதிகள் உள்ளதா? - ஆட்சியர் நேரில் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கல்வராயன் மலைப் பகுதியில் பேருந்து சேவைக்கேற்ற சாலை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வரும் அக்.22 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷத்தன்மை கொண்ட கள்ளச்சாராயம் அருந்தி 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதையடுத்து கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி ஆஜராகி, “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கல்வராயன் மலைக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தேவையான சாலை வசதிகள் இல்லை” என விழுப்புரம் கோட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். அரசு தரப்பில், கல்வராயன் மலைப்பகுதியில் 95 சதவீதம் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “கல்வராயன் மலைப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு உகந்த வகையில் சாலை வசதிகள் உள்ளதா என்பது குறித்து வரும் அக்.22-ம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேணடும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT