தமிழகம்

ஆண்டிப்பட்டியில் தொடர் மழை: பருவத்துக்கு முன்பே காலிஃபிளவர் அறுவடை

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் காலிஃபிளவர் விளைச்சல்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றை, 20 நாட்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளான சில்வார்பட்டி, சேடபட்டி, டி.புதூர், அணைக்கரைப்பட்டி, புள்ளிமான் கோம்பை, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிஃபிளவர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆற்றங்கரையோர நிலங்களில் சுமார் 50-க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காலிஃபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.‌

இங்கு விளையும் காலிஃபிளவர் பூக்கள் ஆண்டிபட்டி காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வெளிமார்க்கெட்டிற்கு சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் காலிஃபிளவர் விளைச்சல்‌ பாதிக்கப்பட்டுள்ளது. காலிஃபிளவர் செடிகளை 80 நாட்கள் வரை வளர்த்து அதன் பிறகுதான் அறுவடை செய்ய வேண்டும். ஆனால் தொடர் மழையின் காரணமாக, 20 நாட்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதிலும் மழையால் பெரும்பாலான காலிஃபிளவர் செடிகள் அழுகிய விட்டன. இதனால் மார்க்கெட்டில் ஒரு காலிஃபிளவர் மூடை ரூ.350 முதல் ரூ.400 வரை (15 பூக்கள்) விலை போன நிலையில் தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த காலிஃபிளவர்களில் பெருமளவு அழுகிவிட்டன. விலையும் குறைந்து விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காலிஃபிளவர் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT