திருநெல்வேலி: அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அக்டோபர் 15-ம் தேதி மாலை முதல் அக்டோபர் 16-ம் தேதி நள்ளிரவு வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.
எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும்.
இந்த இரண்டு நாட்களும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம். இவ்வாறு ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.