மதுரை: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விதித்த நிபந்தனை இன்று தளர்த்தப்பட்டது.
தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன். மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி இருந்தது. அதன்படி நான்கு வார காலம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவருக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 4 வார நிபந்தனை காலம் முடிவடையாமல் நிபந்தனையை தளர்த்த முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் நிபந்தனை தளர்வு கோரிய மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “நீதிமன்ற உத்தரவுபடி தொடர்ந்து 4 வாரங்கள் கையெழுத்திட்டிருப்பதால் நிபந்தனையை தளர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று நிபந்தனையை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார்.