சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதியை உறுதி செய்ய வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பேரிடர் நிவாரண முகாம்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தி இருக்க வேண்டும்.
குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சுகாதார மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் கனமழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.
கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்களையும் அமைக்க வேண்டும். போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும்.
பருவமழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும். காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப வேண்டும். பருவகால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.