முதல்வர் ஸ்டாலின் 
தமிழகம்

வாகன விபத்தில் காவலர் உயிரிழப்பு: ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: மணலி அருகே கிரேனில் மோதி காவலர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.25 நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (36). இவர் எண்ணூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் காவலர்களுக்கான அணிவகுப்புப் பயிற்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சுமணன் பைக்கில் வீட்டில்இருந்து புறப்பட்டுச் சென்றார். வழியில் மணலி சிபிசிஎல் நிறுவனம் அருகே செல்லும்போது குண்டும், குழியுமாக இருந்த சாலையில் நிலை தடுமாறி சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயம் அடைந்தலட்சுமணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மனைவியும் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

முதல்வர் இரங்கல்: சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில், போக்குவரத்துப் பிரிவில் காவலராக பணியாற்றி வந்த லட்சுமணன் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

போக்கு வரத்துக் காவலர் லட்சுமணன் உயிரிழப்பு தமிழக காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

SCROLL FOR NEXT