நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு கோரி சூளை பகுதியில், ராஜா முத்தைய சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்கள். படம்: ச.கார்த்திகேயன் 
தமிழகம்

மூர் மார்க்கெட் அருகில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 130 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு கோரி சாலை மறியல்

செய்திப்பிரிவு

சென்னை: புதிய மூர் மார்க்கெட் பகுதியில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 130 குடும்பங்களுக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்க வலியுறுத்தி சூளை பகுதியில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேரு விளையாட்டரங்கம் அமைப்பதற்கு முன்பாக அந்த இடத்தில் வசித்து வந்த 80-க்கும் மேற்பட்டகுடும்பங்கள் அகற்றப்பட்டு, தற்போது புதிய மூர் மார்க்கெட் இயங்கிவரும் நேரு விளையாட்டரங்கத்தின் பின்புறம் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்குமுன்பு விளையாட்டரங்கை விரிவுபடுத்தும்போது, அந்த இடத்தில்வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.

விளையாட்டரங்கத்துக்கு சொந்தமில்லாத இடத்தில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை. தற்போது இப்பகுதியில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களும் தங்களுக்கு வீடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அங்கு 2011-ம் ஆண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்து, அரசிடம் நிவாரணம் பெற்றதற்கான சான்றுகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், அப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி அடையாள எண்களை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை வீடு ஒதுக்கவில்லை. இதனிடையே, அப்பகுதியில் அருகில் கண்ணப்பர் திடலில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு வழங்கப்படாததைக் கண்டித்து ராஜா முத்தையா சாலையில் சூளை பகுதியில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.

SCROLL FOR NEXT