தமிழகம்

சொற்பொழிவு சர்ச்சை விவகாரம்: அசோக் நகர் பள்ளியில் மீண்டும் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மீண்டும் விசாரணை நடத்தினார். சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மகாவிஷ்ணு என்பவர் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சென்னை அசோக் நகர் பள்ளியில் 3-வது முறையாக நேற்று விசாரணை நடத்தினார். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களிடம் நிகழ்ச்சி தொடர்பாக விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளி தலைமையாசிரியர்களும் விளக்கமான பதில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அவற்றை கொண்டு விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கை இன்று அல்லது நாளை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT