சென்னை: சென்னையில் பார்முலா கார் பந்தயத்தைவரும் ஆகஸ்ட் இறுதியில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகி்ன்றன.
இந்நிலையில், நேற்று தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனாவிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஐ.எஸ்.இன்பதுரை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை தெருக்களை சுற்றி தமிழக அரசு மற்றும் ரேசிங் புரமோசன் நிறுவனம்ஆகியவை இணைந்து பார்முலா கார் பந்தயத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அந்த பந்தயத்தை நடத்த தி்ட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சென்னையின் சாலைகள் நெருக்கடியான சூழலில் உள்ளன.
சென்னையில் இந்த பந்தயத்தை நடத்தினால் தேவையற்ற பல பிரச்சினைகளும், பின்விளைவுகளும் ஏற்படும். பந்தயம் நடக்கும்போது பல பெரிய சாலைகள் மூடப்பட்டு, போக்கு வரத்து நிறுத்தப்பட வேண்டியதிருக்கும்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் போன்றவை உள்ளன. பந்தய கார்கள் செல்லும்போது 120 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் உருவாகும். இது நோயாளிகளை பாதிக்கும். இருங்காட்டுக் கோட்டையில் பந்தயத்தை நடத்தினால் பொது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்குஉச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.