தமிழகம்

மத்திய பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய ஒன்றிணைவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த செய்தியை பகிரும்போது பெருமை பொங்குகிறது.

மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியா முழுவதும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும்.இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT