நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏர்வாடி ஊராட்சியில் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி, கட்டிடத்தின் மேற்கூரை, சுவர்கள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி விடுகின்றன. இங்கு பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் கடந்த சில மாதங்களாக அலுவலகத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த இந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.