சென்னை: எனது இத்தகைய வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என,தனது 75-வது பிறந்தநாள் விழாவில் வெங்கய்ய நாயுடு பேசினார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் 75-வது பிறந்தநாள் மற்றும் பொதுவாழ்க்கையில் 50-ஆண்டு நிறைவையொட்டி, அவருக்கான பாராட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபா தலைமை தாங்கினார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஐஜேகே நிறுவன தலைவர் பாரிவேந்தர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி.,தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் விஷால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கை குறித்த சிறப்பு காணொலி திரையிடப்பட்டது. பின்னர், பிரதமர் மோடி வெளியிட்ட வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, வெங்கய்ய நாயுடு அனைவருக்கும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எனக்கும், சென்னைக்கும் எப்போதும் தனிப்பட்ட பந்தம் உண்டு. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, இங்குள்ள வாழ்க்கை நெறிமுறைகள் எனக்கு எப்போதும் பிடிக்கும். உலகின் மிகவும் மூத்த மொழி, பழமையான மொழி தமிழ். அத்தகைய தமிழ் மொழிக்கு நான் உரிய மதிப்பளித்து வருகிறேன். எனது அரசியல் வாழ்க்கையை மாணவர் பருவத்தில் தொடங்கினேன். குறிப்பாக, 14 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தேன். எனது இத்தகைய வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தான் முக்கிய காரணம்.
அதன்பிறகு, எனது 18-வது வயதில் கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்தேன். இதன் மூலம் நான் தலைமைத்துவ பண்பை கற்றுக் கொண்டேன். ஆரம்ப காலத்தில், நெல்லூரில் ஒருநாள் வாஜ்பாயுடன் பேசும் வாய்ப்புஎனக்கு கிடைத்தது.
அப்போது, வாஜ்பாய் மேடையில் பேசும்போது, ‘‘ஒரு நாள் நீ பாஜக தேசியதலைவராவாய்’’ என்று கூறினார்.அதேபோல், நானும் தலைவரானேன். ஆரம்பத்தில் வழக்கறிஞராக இருந்த நான், பின்பு பாஜகவில் இணைந்தேன். தற்போது கட்சிஎன்னை வழிநடத்தி இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
இந்தியா உலகின் விஸ்வ குருவாக மாறுவதற்கு இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள், கடினஉழைப்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நான்இதைப் பின்பற்றியதால் தான்இத்தகைய வளர்ச்சி அடைந்திருக்கிறேன். மேலும், இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ள நமது பொருளாதாரம் மிக விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். மேலும் நாடாளுமன்றம் என்பதுஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமாக விவாதம்நடத்துவதற்கும், சட்டம் இயற்றுவதற்கும் மட்டுமானது. கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான இடம் அல்ல. இவ்வாறு அவர்பேசினார். முன்னதாக, நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடுவின் காலில் விழுந்து ஓ.பன்னீர்செல்வம் ஆசிபெற்றார்.