சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் குடிநீர் குழாய் இணைப்பு பணி காரணமாக ராயபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 மண்டலங்களில் சில பகுதிகளில் இன்றும், நாளையும் இரு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
அதன் காரணமாக இன்று காலை10 மணி முதல் நாளை மாலை 6மணி வரை (36 மணி நேரம்) ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் சில பகுதிகளில் குழாய்களில் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி ராயபுரம் மண்டலத்தில் புரசைவாக்கம் (பகுதி), பெரியமேடு, சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், 7 கிணறு சாலை, முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம் (பகுதி), கொண்டிதோப்பு ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
மேலும் திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணாநகர் மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், புரசைவாக்கம் (பகுதி), தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலத்தில் தியாகராய நகர், சைதாப்பேட்டை ஆகியஇடங்களிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரிய இணையதளத்தை அணுகலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.