சோதனை 
தமிழகம்

ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.2.25 லட்சம் பறிமுதல்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இரு மாநில போக்குவரத்துத் துறையின் சோதனைச் சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களை சோதனையிடும் சோதனைச் சாவடியும், அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய வாகனங்களை தணிக்கை செய்து வரி வசூலிக்கும் சோதனைச் சாவடியும் உள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடும் சோதனைச் சாவடியில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. இங்கு லஞ்சம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புதுறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி-யான வடிவேல் தலைமையில் போலீஸார் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமார் மற்றும் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT