பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் | படங்கள்: எல். பாலச்சந்தர். 
தமிழகம்

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும் பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப்படகுகள், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர் அதிலிருந்த 25 மீனவர்களை கைது செய்தனர். 25 மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் ஜூலை 15-ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு பாம்பனில் நாட்டுப் படகு மீனவ தலைவர் எஸ்.பி. ராயப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை கடற்படையினரை கண்டித்தும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்து தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் வேலை நிறுத்தப் போராட்டமும், வெள்ளிக்கிழமை காலை பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிடும் போராட்டமும், வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் ரயில் நிலையத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி செவ்வாய்கிழமை பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாம்பனில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் ஆழமற்ற கடற்பகுதிகளில் நங்கூரமிடப்பட்டிருந்தது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

SCROLL FOR NEXT