சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சம்பவம் தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் புதன்கிழமை ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 49 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களில் செவ்வாய்க்கிழமை வரை 20 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 29 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (37) புதன்கிழமை காலை உயிரிழந்தார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 28 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.