தமிழகம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு: கோப்புக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக பேரவைத் தலைவருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், மனுதாரர் பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT