சென்னை: புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ஜூலையில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடமும் ஒன்று. 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலை உட்பட பல்வேறு பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. சுரங்கப்பாதை பணிக்காக, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 18 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி புரசைவாக்கத்தில் ஜூலையில் தொடங்கதிட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, புரசைவாக்கம் - கெல்லீஸ் நோக்கிசுரங்கப்பாதை பணி நடைபெறவுள்ளது. புரசைவாக்கத்தில் சுரங்கப்பாதை பணியை தொடங்க அடிப்படை பணிகள் முடிந்துவிட்டன. இங்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டும்.
எனவே, சுரங்கம் தோண்டும் இயந்திரம் கெல்லீஸ் மெட்ரோ நிலையத்தை அடைய அதிக நேரம் எடுக்காது. மேலும், சுரங்கம் தோண்டும் பணி சரியான நேரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான 925 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.