கள்ளக்குறிச்சி அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர். 
தமிழகம்

குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும்: பழனிசாமி தகவல் @ கள்ளக்குறிச்சி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது: கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி போலீஸில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சபாநாயகரிடம் மனுவும் அளித்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அவருக்கு மக்கள் நலன் குறித்து அக்கறை இல்லை.

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருச்செங்கோடு வட்டம் தேவனோங்கோடு கிராமத்தில், திமுக நிர்வாகி கள்ளச்சாராயத்தை விற்பனை செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அருகிலேயே காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவை உள்ளன. கள்ளச் சாராய விற்பனையை காவல் துறையினர் தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் பெரிய கும்பல் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த ஒரு தம்பதியின் 3 குழந்தைகளின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது. அவர்களது கல்விச் செலவை அதிமுக ஏற்பதுடன், அவர்கள் குடும்பத்துக்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார். இவ்வாறு பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT