கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். | படம்: எஸ்.குருபிரசாத் 
தமிழகம்

சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் பலி; 32 பேருக்கு தொடர் சிகிச்சை | கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம்

வி.சீனிவாசன்

சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 32 பேருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர்களை, அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லும் மருத்துவப் பணியாளர்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 42 பேர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், கள்ளக்குறிச்சி மாதவசேரி நாராயணசாமி (65), கருமாபுரம் சுப்பிரமணி (50), வாய்க்கால் மேட்டு தெரு ராமு (50), கருணாபுரம் ஆனந்தன் (50), துருகம் ரோடு ரவி (60), கருணாபுரம் விஜயன்(59), கோட்டை மேடு மனோஜ் குமார் (33), விளான்தாங்கல் ரோடு ஆனந்தன் (47), பழைய மாரியம்மன் கோயில் தெரு ராஜேந்திரன் (64), சேஷசமுத்திரம் ராஜா தெரு ராஜேந்திரன்(65) ஆகிய 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், வீரமுத்து ( 33), சிவா (32), அருள் (38), கிருஷ்ணமூர்த்தி( 55), வீரமுத்து (60), பெரியசாமி( 65), சந்திரசேகர்( 27), செல்வராஜ் ( 57) கலியன் (64), முத்து( 55 ), கணேசன்( 59), சுரேஷ்( 42), சங்கர் ( 38) உள்ளிட்ட 32 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டிருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில், மாநகர காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT