தமிழகம்

குடும்ப நிறுவனங்களுக்காக அரசு கேபிளை முடக்குவதா? - பழனிசாமி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தன் குடும்ப நிறுவனங்களுக்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முடக்க திமுக அரசு நினைக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால், ஒருசில குடும்ப காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனமானது, முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் எவ்வித செயல்பாடும் இன்றி கிடப்பில் இருந்தது.அதன்பின் 2011-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு, வாரியத் தலைவர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றது.

நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்மூலமாக, 40 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டிஜிட்டல் லைசென்ஸ் பெறப்பட்டது. அதன்பின், 30 லட்சம் செட்-டாப் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 24 ஆயிரம் கேபிள்டிவி ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்-டாப்பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும், அதிமுக ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம் நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையைமுறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தால் கடந்தஜூன் 15-ம் தேதி முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களும், 10 லட்சத்துக்கும் அதிகமான அரசுகேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிஉள்ளது.

திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி-ஐ முடக்க நினைக்கிறது. திமுக அரசுக்கு இதற்காக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT