தமிழகம்

தமிழகத்தில் 6 மாதங்களில் 42,486 பேருக்கு காசநோய் பாதிப்பு

சி.கண்ணன்

சென்னை: தமிழகத்தில் 6 மாதங்களில் 42,486 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் காசநோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்படுகிறது.

சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டும் வருகிறது. இதனால் காசநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல்கட்ட சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணமாகி வருகின்றனர்.

இந்த ஆண்டில் நாடு முழுவதும் அரசு மற்றும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தரவுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 11.83 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காசநோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 42,486 பேருக்கு நோயின் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 13,913 பேரும், அரசு மருத்துவமனைகளில் 28,573 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், எண்ணிக்கை 5 சதவீதம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT