தமிழகம்

“நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” - சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (ஜூன் 5) மாலை இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்த கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது டெல்லி விமான நிலையத்தில் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “டெல்லி விமான நிலையத்தில், கருணாநிதியின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தேன்.

அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.

சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார் என்றும், அவர் தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்றும் உறுதியாக நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT