உயிரிழந்த ரகுராமன் 
தமிழகம்

திமுக கொடி கம்பம் அமைக்கும்போது மின்சாரம் தாக்கி தொண்டர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே திமுக கொடிகம்பம் அமைக்க முயன்றபோது தொண்டர் உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது, அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கிழக்குமேடு கூட்டுச்சாலையில், திமுக கொடி கம்பத்தை மீண்டும் அமைக்கும் பணியில் திமுகவினர் நேற்று ஈடுபட்டனர். 30 அடி உயர கொடி கம்பம் திடீரென சாய்ந்து, மேலே சென்ற மின் கம்பியில் விழுந்தது.

அப்போது, இடையங்கொளத்தூர் கிராமத்தில் வசித்த ரகுராமன் (35), கிழக்கு மேடு கிராமத்தில் வசிக்கும் கிளை செயலாளர்மணி (50), அப்துல்லா (34) கோதண்டராமன் (33), ராஜி (35) ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில், ரகுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோதண்டராமன், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் மணி சிகிச்சை பெற்று வருகிறார். ராஜி, அப்துல்லா சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து ரகுராமன் தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT