தமிழகம்

ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் போலீஸ் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே இன்று காலை இரு பைக்குகள் மோதிய விபத்தில் தெற்கு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ நடராஜன் உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன்(53). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கண்மணி(21) என்ற மகளும், முகேஷ்(17) என்ற மகனும் உள்ளனர். நடராஜன் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது.

மருத்துவ விடுப்பில் இருந்த நடராஜன் கடந்த மார்ச் 24ம் தேதி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ யாக பணியில் சேர்ந்தார். அவரால் பைக் ஓட்ட முடியாது என்பதால், முகேஷ் தினமும் பைக்கில் வேலைக்கு அழைத்து சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் முகேஷ் நடராஜனை வேலைக்கு அழைத்து சென்றார். அப்போது சத்திரப்பட்டி - ராஜபாளையம் சாலையில் சொக்கலிங்காபுரம் அருகே வந்த போது, ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT