கோப்புப்படம் 
தமிழகம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகளுக்கு மூச்சு திணறல்: திருச்சியில் திடீரென தரையிறங்கிய பெங்களூரு விமானம்

செய்திப்பிரிவு

திருச்சி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 12.50 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. இதில் 137 பயணிகள், 4 பணிப்பெண்கள் மற்றும் 2 பைலட்கள் என மொத்தம் 143 பேர் இருந்தனர்.

வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, பயணிகளுக்கு மூச்சுத்திணறல் உண்டானது.

இதுகுறித்து வான் கட்டுப்பாட்டு அறைக்கு பைலட்-கள் தகவல் அளித்த நிலையில், விமானத்தை திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.40 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. அதில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாற்று விமானத்தில்... இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைசரி செய்யும் பணியில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர். எனினும், உடனடியாக சரி செய்யமுடியவில்லை. இதையடுத்து, துபாயில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 3.20 மணிக்கு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை,மாற்று விமானமாக பெங்களூருவுக்கு இயக்க விமான நிறுவனம் முடிவு செய்தது. தொடர்ந்து மாலை6 மணிக்கு 137 பயணிகளுடன் அந்த விமானம் பெங்களூருவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

SCROLL FOR NEXT